search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசை முன்னிட்டு  காவிரி கரையில் தர்ப்பணம் செய்து  புனித நீராடிய மக்கள்
    X

    காவிரி ஆற்றில் புனித நீராடிய மக்கள்.

    ஆடி அமாவாசை முன்னிட்டு காவிரி கரையில் தர்ப்பணம் செய்து புனித நீராடிய மக்கள்

    • காவிரி ஆற்றின் மறு கரையில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என 3 நதிகளும் சங்கமமாகும் பவானி கூடுதுறை உள்ளது.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களும் பொதுமக்களும் ஆற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றின் மறு கரையில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என 3 நதிகளும் சங்கமமாகும் பவானி கூடுதுறை உள்ளது. இங்கு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களும் பொதுமக்களும் ஆற்றில் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து ஆயிரக்க ணக்கான மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் பரிகார பூஜை செய்து முக்கூடல் ஆற்றில் புனித நீராடினர். அதன் பிறகு சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆதிகேசவ பெருமாள், லட்சுமி நரசிம்மர், வள்ளி தேவசமேத ஆறுமுகக்கடவுள் என அனைத்து மூலவர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    முக்கூடல் ஆற்றில் ஆன்மீக பக்தர்கள் புனித நீராடவும் பின்னர் உடைகளை மாற்றிக்கொள்ளவும் கோவில் நிர்வாகத்தினர் தனித்தனி இடங்களை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்களுக்கு ஆற்றங்கரை படிகட்டுகள் அருகில் சிமெண்ட் தொட்டிகள் கட்டப்பட்டு அதில் காவிரி ஆற்று நீர் நிரப்பப்பட்டு குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    ஆற்றில் நீராடும் போது பக்தர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டால் அவர்களை காப்பாற்ற பரிசல்களுடன் பரிசல் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி போலீஸ் டி.எஸ்.பி சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடந்த 2 வருடங்க ளாக கொரானா நோய்த்தொற்றால் பவானி கூடுதுறை ஆற்றில் பரிகாரம் செய்து புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடைகள் நீக்கப்பட்டதால் ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோவை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பெருமளவில் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    Next Story
    ×