கோத்தகிரி, குன்னூரில் கொட்டி தீர்த்த கனமழை

கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோத்தகிரி: 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான காலநிலையே நிலவி வந்தது. இரவில் சாரல் மழையாக தொடங்கி நள்ளிரவில்  பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இரவு 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக கோத்தகிரி பஸ் நிலைய சாலை உள்பட முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதியடைந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிலவிய வெயிலால் தேயிலை செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது பெய்த மழையால் தேயிலை செடிகளில் ஏற்பட்டிருந்த நோய் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக கோத்தகிரி மக்களின் நீராதாரமான ஈளடா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து மிக வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சோலூர் மட்டம், கொடநாடு, கீழ்கோத்தகிரி, குஞ்சப்பனை உள்பட பிற பகுதிகளிலும் மழை கொட்டியது. 

ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக நீலகிரியில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இந்த இதமான காலநிலையை ஊட்டியில் குவிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மிகவும் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். 

இன்று காலையும் தொடங்கி மழை பெய்து வருகிறது. இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com