தமிழகத்தில் 8 இடங்களில் புதிதாக சூழல் சுற்றுலா தொடக்கம்

அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி கட்டி முடிக்கப்பட்ட 204 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
தமிழகத்தில் 8 இடங்களில் புதிதாக சூழல் சுற்றுலா தொடக்கம்
Published on

ஊட்டி,

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.17.36 கோடி மதிப்பீட்டில், கட்டி முடிக்கப்பட்ட 204 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இதையடுத்து, ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் 4 பயனாளிகளுக்கு தனி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணையையும், தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் பயனாளிகளே சுயமாக வீடுகட்டும் திட்டத்தின்கீழ் 20 பேருக்கு பணி ஆணையையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் சுதா்ஷன், உதவிப் பொறியாளா் விவேக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதற்கிடையே அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தை பசுமையாக்கல் திட்டம் மற்றும் 33 சதவீதம் வனப்பரப்பை உயர்த்தும் திட்டத்தின் கீழ் வருகிற 2030-ம் ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் 261 கோடி மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தற்போது வனத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் சோலை மரக்கன்றுகள் நாற்று உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 2022-23-ம் ஆண்டிற்குள் 2.5 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.

சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் 1.73 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள நாற்றுகள் மற்ற துறைகளை கொண்டு உற்பத்தி செய்து நடவு செய்யப்படும். மேலும் தமிழகத்தில் 8 இடங்களில் புதிதாக சூழல் சுற்றுலா உருவாக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் புதிதாக காட்சி கோபுரம், அலங்கார நடைபாதைகள் அமைக்க ப்படும். லாங்வுட் சோலை பகுதியில் வன ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com