search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: காவிரியில் புனித நீராடிய பக்தர்கள்  ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கட்டுப்பாடு அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணை அருகே காவிரியில் புனித நீராடிய பக்தர்கள். 

    மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: காவிரியில் புனித நீராடிய பக்தர்கள் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கட்டுப்பாடு அதிகரிப்பு

    • காவிரி ஆற்றின் கரைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடபபட்டது.
    • இதைமுன்னிட்டு பக்தர்களும் பொதுமக்கள் மக்களும் காவிரியில் வந்து புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வணங்கினர்.

    மேட்டூர்:

    காவிரி பாய்ந்து ஓடும் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றின் கரைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடபபட்டது. இதைமுன்னிட்டு பக்தர்களும் பொதுமக்கள் மக்களும் காவிரியில் வந்து புனித நீராடி தங்கள் இஷ்ட தெய்வங்களையும் குலதெய்வங்களையும் வணங்கினர்.

    புதுமணத்தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அறிவித்திருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு புனித நீராடினார்கள். மேட்டூரிலும் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அணை மற்றும் காவிரிக்கரை பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர்.

    இன்று காலையில் இருந்தே சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் மேட்டூர் வந்தனர். இவர்கள் காவேரி பாலம் பகுதியில் ஆற்றில் நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார்கள் இவ்விழாவை முன்னிட்டு காவேரி பாலம் பகுதியில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை கடைகள், ராட்டி–னங்கள், தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதால் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஏ.டி.எஸ். பி. கென்னடி தலைமையில் மேட்டூர் டி.எஸ்.பி. விஜயகுமார் மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    போலீசாருடன் நாட்டு நல பணி திட்ட மாணவர்கள், ஊர்க்காவல் படையினர், வருவாய்த்துறை இணைந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சாமி சிலைகள் சாமியின் ஈட்டி, வேல் போன்ற ஆயுதங்கள் காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்து மேளதாளங்களுடன் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது.

    தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் மேட்டூர் காவிரி பாலம் மற்றும் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    காவிரி ஆற்றின் மற்ற எந்த பகுதிகளிலும் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் கண்காணிப்பு கோபுரமும், கண்காணிப்பு கேமராவும் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேட்டூர் நகராட்சி சார்பில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு காவேரி பாலம் பகுதியில் தற்காலிக உடைமாற்றும் வரை மின்விளக்கு வசதி உட்பட அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    Next Story
    ×