

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளுக்குட்பட்ட 153 வார்டுகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்குட்பட்ட 294 வார்டுகள் என மொத்தம் 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.
நாமக்கல் லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்படும் இடம், பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை நகர்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநருமான இன்னசென்ட் திவ்யா, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாக்கு எண்ணிக்கை மையத்தினை தயார் செய்திட வேண்டும்.
அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றிட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.
முன்னதாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் வாக்கு பதிவின் போது பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு உபகரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது எஸ்.பி.சரோஜ்குமார் டாகூர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.