search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி அருகே மாயமான இளம்பெண்  உறவினர்களிடம் ஒப்படைப்பு
    X

    கருமத்தம்பட்டி அருகே மாயமான இளம்பெண் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    • உமாதேவி 2 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார்
    • உமாதேவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் உமாதேவி (வயது40).மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணமாகவில்லை.

    இவரை அவரது அக்கா ருக்மணி என்பவர் கவனித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உமாதேவி மாயமானார். அவரை அவரது அக்கா பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து ருக்மணி மாயமான தனது தங்கையை கண்டுபிடித்து தரும்படி கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான உமா தேவியை தேடி வந்தனர். ஆனால் கடந்த 2 வருடமாக அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கேரள அரசு, வீடு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்களை கண்டுபிடித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்தி வந்தனர்.

    அப்போது தொண்டு நிறுவனத்தினர் கேரள மாநிலம் கொல்லத்தில் சாலையோரத்தில் சுற்றித்திரிந்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் வழங்கி அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று விசாரித்தனர்.

    அப்போது அவர்களில் உமாதேவியும் ஒருவர். அவரிடம் விசாரித்ததில் அவர் கோவையை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்த தொண்டு நிறுவனத்தினர் கருமத்தம்பட்டி போலீசாரை தொடர்பு கொண்டு உமாதேவியின் குடும்பம் எங்கு உள்ளது என விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து கருமத்தம்பட்டி போலீசார் உமாதேவி அக்கா ருக்மணி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து கருமத்தம்பட்டி போலீசார் உமாதேவியை அவரது அக்கா ருக்மணியிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×