search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் பில்லூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு
    X

    மேட்டுப்பாளையத்தில் பில்லூர் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு

    • ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதன் மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு சுமார் 23 கோடி லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டி பெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி அதாவது 17 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தண்ணீரை தங்கு தடையின்றி வழங்க முடியும்.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டி பெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது.

    3-வது குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில், 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது. அதன்படி கட்டாஞ்சி மலையில் சுரங்கம் அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து உள்ளது. இதர பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட தொடர்பு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கலெக்டர் சமீரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்தார்.

    பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ரூ 49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சங்கனூர் பள்ளத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×