search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை விளையாட்டு மைதானத்தில் ரூ.5 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள்- அமைச்சர் திறந்து வைத்தார்
    X

    தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் ஸ்கேட்டிங் தளத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தஞ்சை விளையாட்டு மைதானத்தில் ரூ.5 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள்- அமைச்சர் திறந்து வைத்தார்

    • 750 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை, 75 மின்விளக்குகள், 75 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரு.5 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து முடிந்தன.

    தஞ்சை மாநகர மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ரூ.3 கோடி மதிப்பில் 1200 மீட்டர் தூரத்திற்கு நடைபாதை, 750 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை, 75 மின்விளக்குகள், 75 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.2 கோடியில் திறந்தவெளி ஸ்கேட்டிங் தளம், கையுந்து பந்து மைதானம் மேம்படுத்துதல், கழிவறை வசதி அமைத்தல், நுழைவு வாயில் அமைத்தல் போன்ற பணிகளு முடிக்கப்பட்டுள்ளன.

    இந்த மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் வரவேற்றார்.

    விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்னை சத்யா அரங்கில் முடிக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்தார்.

    முதலில் ஸ்கேட்டிங் மைதானத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் நடைபாதை, கையுந்துபந்து மைதானத்தை திறந்து வைத்து மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி.கே.ஜி.நீலமேகம் , கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித்தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு சென்று மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா படத்தை திறந்து வைத்தார்.

    முன்னதாக தஞ்சைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விளாங்குடி, பள்ளியக்கிரஹாரம் பிரிவு சாலை, கரந்தை பஸ் நிறுத்தம், கொண்டிராஜபாளையம் ரவுண்டானா, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை, புதுஆற்றுப்பா லம், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×