திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம்

திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மழைநீர் சூழ்ந்தால் இந்த கல்லூரி மாணவ- மாணவிகளை தற்காலிகமாக விருதுநகர் மருத்துவக்கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகளிடம் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேச்சு வார்த்தை நடத்தினார்.
போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகளிடம் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேச்சு வார்த்தை நடத்தினார்.
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரி நீர் பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்து கல்லூரிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மழைநீர் சூழ்ந்தால் இந்த கல்லூரி மாணவ- மாணவிகளை தற்காலிகமாக விருதுநகர் மருத்துவக்கல்லூரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

விருதுநகர் அரசு மருத்துவமனையில் 3-வது மாடியில் ஒரு தளத்தை மட்டும் ஒதுக்கீடு செய்தது சரியல்ல. அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. அரசு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு நிறை வேற்றாமல் உள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் கட்டிடங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தண்ணீர் எந்த நேரத்தில் வருமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.

மாணவர்களின் நலன் கருதி அரசு உடனடியாக தலையிட்டு மாவட்ட நிர்வாகம், பொதுப்ப ணித்துறை, வருவாய்த்துறை ஒன்றிணைந்து தமிழ்நாட்டின் ஒரே ஓமியோபதி கல்லூரியாக உள்ளதால் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்செல்வம், பொருளாளர் திருப்பதி, திருமங்கலம் நகர் செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சரவண பாண்டி, சிங்கராஜ்பாண்டி, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஷ், பேரவை பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதிசாமிநாதன், வாகைகுளம் சிவசக்தி, சிவபாண்டி, பொன்னமங்கலம் ஜெயமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com