search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை திட்டத்தில் பணிகள் நடைபெறவில்லை: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    X

    திருநகரில் நடந்த அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    பாதாள சாக்கடை திட்டத்தில் பணிகள் நடைபெறவில்லை: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

    • பாதாள சாக்கடை திட்டத்தில் பணிகள் நடைபெறவில்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டி உள்ளார்.
    • ஜெயலலிதா ரூ.250 கோடி சிறப்பு நிதி வழங்கினார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க. சார்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் மதுரை மாநகராட்சி உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. பூமிநாதன், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக அப்போ தைய முதல்வர் ஜெயலலிதா ரூ.250 கோடி சிறப்பு நிதி வழங்கினார். தற்போதைய தி.மு.க. அரசு அது போன்ற எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.

    எய்ம்ஸ் மருத்துவமனை வருகிற 2026-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என மத்திய அமைச்சர் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். எனினும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2028-ல் தான் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட பணிகள் முடியும் என மக்களுக்கு தவறான தகவலை தெரிவித்து வருகிறார்.

    தி.மு.க. அரசு மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைபிடிப்பதால் நிதிகளை கேட்டு பெற முடியாத சூழல் உள்ளது. மதுரையின் விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என சட்டப்பேரவையில் தெரிவித்தேன். அப்போது ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது தொடர்பாக எந்த பணிகளும் நடைபெற வில்லை.

    முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக அவர் புகார் அளித்த நிலையில், அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக பழி வாங்கும் நடவடிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்டத் துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், வட்டச் செயலாளர் என்.எஸ். பாலமுருகன் வரவேற்புரையாற்றினார். பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், சாக்கிலிபட்டி மணி, வட்டச் செயலாளர் எம்.ஆர்.குமார், நாகரத்தினம், பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×