பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி

பெற்றோரை இழந்த குழந்தைகள்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும். இந்த தகவலை மதுரை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி
Published on

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் கலெக்டரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக ''மிசன் வத்சல்யா'' திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகள், தந்தையை இழந்த குழந்தைள், எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள் மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்ப பொருளாதார சூழ்நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

கல்வி, மருத்துவம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு நிதிஆதரவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது மாதம் ரூ.4 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளின் பெற்றோர்களது வருமானச்சான்று நகர்புறத்தில் ரூ.96ஆயிரமும் கிராமபுறத்தில், ரூ.72 ஆயிரமும் இருக்க வேண்டும்.

குழந்தைகள் பள்ளி செல்லும் குழந்தைகளாகவும், குழந்தைகள் இல்லம், விடுதிகளில் தங்காமல் பெற்றோர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளாகவும், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். உதவித்தொகை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் அல்லது 18 வயது முடியும் வரை வழங்கப்படும்.

உதவித்தொகையினை பெற உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம், 3-வது தளம், மதுரை-625 020 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com