யானையை தாக்கிய பாகனிடம் விசாரணை

மீனாட்சி அம்மன் கோவில் யானையை தாக்கிய பாகனிடம் துணை கமிஷனர் விசாரணை நடத்தினார். பார்வதி யானையை பாகன் அடித்து துன்புறுத்தினார். அதில் யானைக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
பார்வதி யானை
பார்வதி யானை
Published on

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா நடந்து வருகிறது. 8-ம் திருவிழாவான நேற்று அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது கோவில் யானை பார்வதி ஊர்வலத்தின் முன்பாக சென்றது.

அப்போது வடக்கு-கிழக்கு ஆடி சந்திப்பில் உள்ள 16 கால் மண்டபத்தில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த நேரத்தில் யானை, அம்மனை 3 முறை வலம் வந்து மண்டியிட்டு துதிக் கையை தூக்கி வணங்குவது வழக்கம்.

அதனை செய்யும்படி பாகன், யானைக்கு சைகை செய்தும், யானை அந்த வழிபாட்டை செய்ய முன்வரவில்லை. அது பக்தர்களை கண்டு பயந்து விலகி சென்றது. உடனே பாகன், யானையை கட்டுப்படுத்த அங்குசத்தால் தாக்கினார். இதில் யானை உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. உடனே பாகன், யானையை அங்கி ருந்து அழைத்து சென்று விட்டார்.

யானை சென்ற வழியில் ரத்தம் வழிந்திருந்ததால் பாகன் தாக்கியதில் யானை காயம் அடைந்தது பக்தர்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் வேதனை அடைந்தனர்.

ஏற்கனவே பார்வதி யானை கண்புரை நோயால் அவதிபட்டு வருகிறது. அதற்கு மருத்துவக்குழு வினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் யானையை பாகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யானை தாக்கப்பட்ட போது சம்பவ இடத்தில் இருந்த மேல அனுப்பான டியை சேர்ந்த தேன்மொழி என்பவர் கோவில் அலுவலருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மீனாட்சி அம்மன் சப்பரத்துடன் வடக்கு ஆடி வீதியில் வலம் வந்தபோது உடன் வந்த பார்வதி யானையை பாகன் அடித்து துன்புறுத்தினார். அதில் யானைக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.

இதுகுறித்து கேட்டபோது, யானையை தாக்கியது பாகன் அல்ல. அவரது மகன் என்றும், காயம் அடைந்த யானைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும் உறுதி அளித்தனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்து யானையை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். இதுபோல் வாயில்லா ஜீவன்களை தாக்குவதை தடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக கோவில் நிர்வாக துணை கமிஷனர் அருணாசலம், பாகனிடம் விசாரணை நடத்தினார். இதுபற்றி அவர் கூறும்போது, யானையை பாகன் தாக்கியது உறுதி செய்யப்பட்டதும் பாகன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com