search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொல்லிமலையில்  வல்வில் ஒரி விழா நாளை தொடக்கம்
    X

    கொல்லிமலையில் வல்வில் ஒரி விழாவில் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பார்வையிட்ட காட்சி.

    கொல்லிமலையில் வல்வில் ஒரி விழா நாளை தொடக்கம்

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நாளையும், நாளை மறுநாளும் வல்வில் ஓரிவிழா அரசின் சார்பில் நடைபெற உள்ளது.
    • நாமக்கல் மாவட்டத்துக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    கொல்லிமலை:

    தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. இங்குள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்து மகிழவும், பிரசித்திப் பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்டவற்றுக்குச் 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லவேண்டும். இங்கு பிற மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    கொல்லிமலையில், சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையெழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடையையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சி, மூலிகைச் செடிகள் கண்காட்சி ஆகியவையும் நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு விழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான வல்வில் ஓரி விழா நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள்(புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக நாமக்கல் மாவட்டத்துக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனிடையே வல்வில் ஒரி விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வாசலூர்பட்டி படகு இல்லத்தில் படகு சவாரி மேற்கொள்ள செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்டு, புதியதாக வாங்கப்பட்டுள்ள 3 படகுகளையும், படகுத்துறையில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மலர்கண்காட்சி முன்னேற்பாட்டு பணிகளையும், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வல்வில் ஓரிவிழா தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டார்.

    இந்த ஆய்வின்போது சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மற்றும்ம் நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா, நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மாதேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .சீனிவாசன், சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

    Next Story
    ×