search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் இன்றும் பரவலாக மழை
    X

    குமரி மாவட்டத்தில் இன்றும் பரவலாக மழை

    • குமரி மாவட்டத்தின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
    • அணையிலிருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

    நாகர்கோவில் :

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் குமரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குமரி கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திற்கும், சில நேரங்களில் 65 கிலோ மீட்டர் வேகத்திற்கும் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் இன்று காலையிலும் பரவலாக சாரல் மழை

    நாகர்கோவிலில் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. தக்கலை, திருவட்டார், குலசேகரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குழித்துறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.87 அடியாக உள்ளது. அணைக்கு 614 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. அணைக்கு 385 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட கன்னி பூ அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் கும்பபூ சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர்.

    சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் நாற்று பாவும் பணி நடைபெற்று வருகிறது. பருவமழையையும் பாசன குளத்தில் உள்ள தண்ணீரை யும் நம்பி விவசாயி கள் சாகுபடி பணியை தொடங்கி யுள்ளனர்.

    Next Story
    ×