search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கோடை காலத்தில் மக்களுக்கு வழங்கும் குளிர்பானம்-பழச்சாறுகள் தரமானதாக இருக்க வேண்டும்
    X

    குமரி மாவட்டத்தில் கோடை காலத்தில் மக்களுக்கு வழங்கும் குளிர்பானம்-பழச்சாறுகள் தரமானதாக இருக்க வேண்டும்

    • வியாபாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை
    • சாலையோர உணவு வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம்

    நாகர்கோவில் :

    கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் குளிர்பான கடைகளை அதிக அளவில் நாட தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகளில் பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ள இந்த தருணத்தில், சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும்.

    சாலையோர உணவு வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிழ் பெற்றிருத்தல் அவசியம்.

    குளிர்பானங்கள் தயா ரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப் பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, பயன் படுத்தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி தேதியை உறுதிப்படுத்திட வேண்டும்.

    பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக்கூடாது. பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர் தன் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். இனிப்பு சுவை கூட்ட எவ்விதமான வேதிப் பொருட்களையும் சேர்க்க கூடாது.

    பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பாதுகாப்பான நீரில் தயாரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்குதல் வேண்டும். முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கோப்பைகளில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைகளில் மட்டுமே வழங்க வேண்டும். இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், போதுமான அளவு உடலின் நீர்ச்சத்தை பராமரித்து உடல்நலனை பேணவும், தரமான, பாதுகாப்பான குடிநீர், மோர், இளநீர், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், உணவு வணிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் வாட்ஸ் அப் மூலம் 94440 42322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரி விக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×