

கன்னியாகுமரி :
பாராளுமன்ற நிலைக் குழு அதன் தலைவர் ராஜேந்திர அகர்வால் எம்.பி. தலைமையில் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் எம்.பி.க்கள் ரமேஷ் சந்திர கவுசிக், கவுஸ்லேந்திரகுமார், காஜேன் முர்மு மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரையில் நின்றபடி கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்த குழு சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கும் சென்றது. அங்கு மாலையில் கடலில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
அதன் பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு வந்த பாராளுமன்ற குழுவினரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அதன்பிறகு இந்த எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் உள்ள ஸ்ரீகால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த விநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர், சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்ன திகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இந்த பாராளுமன்ற நிலை குழுவினர் கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.
இந்த எம்.பி.க்கள் குழுவினருடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். இந்த பாராளுமன்ற நிலை குழுவினருடன் ஏராளமான துப்பாக்கி ஏந்திய போலீஸ் அதிரடிப்படையினரும் பாதுகாப்புக்காக வந்து இருந்தனர்.