நவராத்திரி திருவிழாவையொட்டி கொலுமண்டபத்தில் எழுந்தருளிய கன்னியாகுமரி பகவதி அம்மன்

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மற்றும் பக்தர்கள் தரிசனம்திருவிழா அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
நவராத்திரி திருவிழாவையொட்டி கொலுமண்டபத்தில் எழுந்தருளிய கன்னியாகுமரி பகவதி அம்மன்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்றுகாலை தொடங்கியது. திருவிழா அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

1-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. எண்ணை, பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, சீனிவாசன் போற்றி ஆகியோர் நடத்தினார்.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்ககிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது. பின்னர் மூலஸ்தானத்துக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் தியாக சவுந்தரிஅம்மன் என்ற உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை நடந்தது.

பின்னர் அங்கிருந்து உற்சவ அம்பாளை கோவில் மேல் சாந்தி தனது தோளில் சுமந்து கொண்டு மேளதாளம் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக கொலு மண்டபத்துக்கு எடுத்துச் சென்றார். கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடந்தது. அதன் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது.

கொலு மண்டபத்தில் ஏராள மான கொலு பொம்மைகளை 9 அடுக்குகளாக அலங்கரித்து வைத்து இருந்தனர். கொலு மண்டபத்தில் எழுந்தருளிய பகவதி அம்மனையும் அங்கு அலங்கரித்து வைத்தி ருந்த கொலுவை திரளான பக்தர்கள் தரி சித்தனர். நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவி சாந்தினி பகவதியயப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. அவைத் தலைவர் தம்பித் தங்கம், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரைதினேஷ், கன்னியா குமரி பேரூர் செயலாளர் எழிலன், தோவாளை ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பகவதியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவை யொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், அதைத் தொடர்ந்து சமய உரையும், இரவு 7மணிக்கு சிறப்பு பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழாவான அடுத்த மாதம் 5-ந்தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள்அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து மதியம் 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதா னபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமத்தலிங்கபுரம், தங்க நாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை மாலை சென்று அடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதான புரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில் கள் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com