search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் அய்யா வழி பக்தர்கள் திரண்டனர்
    X

    முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் அய்யா வழி பக்தர்கள் திரண்டனர்

    • அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்னதர்மம் போன்றவை நடைபெற்றது.
    • புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதி உள்ளது. இந்த வைகுண்டசாமி பதியில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முட்டப்பதி அய்யா வைகுண்ட சாமி பதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து உகப்படிப்பு நடந்தது. பின்னர் வாகன பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும் அதைத்தொடர்ந்து நித்திய பால் தர்மமும் அன்னதானமும் நடந்தது.

    இதில் கலந்துகொண்ட அய்யா வழி பக்தர்களுக்கு இனிப்பு, தேங்காய், பழம், திருநாமம், வெற்றிலை, பாக்கு மற்றும் பழங்கள் உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் மூத்த தர்மகர்த்தா பாலசுந்தரம் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்னதர்மம் போன்றவை நடைபெற்றது.

    ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    அதிகாலை முதலே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முட்டப்பதியில் குவிந்திருந்தனர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்டசாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.

    இதே போல முட்டப்பதியில் உள்ள அய்யா மூத்த நயினார் பதி, கன்னியாகுமரி அருகே நரியன் விளையில் உள்ள தெட்சணத்து துவாரகாவதி, ஆமணக்கின்விளை வாவைப்பதி, ரஸ்தாகாடு காயாம்பூபதி உள்பட அனைத்து அய்யா வைகுண்டசாமி பதிகளில் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அய்யாவுக்கு பணிவிடைகள் நடந்தது.

    Next Story
    ×