search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பணிகள் நடைபெறுகிறது
    • கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாகராஜா வுக்கு என தனி சன்னதி நாகர்கோவிலில் உள்ளது. இந்த கோவில் நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாக விளங்கு கிறது.

    இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். சர்ப்ப தோஷ பரிகாரம், கால சர்ப்ப தோஷ பரிகாரம், ராகு-கேது பரிகாரம், தொழில் காரியம், திருமண காரியம், குழந்தை பாக்கியம் பெற இத்தலத்திற்கு வந்து வழிபடலாம்.ஜாதகப்படி கல்நாகர் பிரதிஷ்டை செய்ய விரும்பும் பக்தர்கள், இத்திருத்தலத்தில் உள்ள நாகர் பீடத்தில் ஒற்றைக்கல் நாகரை பிரதிஷ்டை செய்யலாம்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் குறிப்பிட்ட சிறப்பு நாட்கள் இருக்கும். அப்படி, நாகராஜா 'ஆயில்யம்' நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நட்சத்திரத்தன்று வந்து பகவானை வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு. முக்கியமாக, ஆவணி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் மிகச்சிறப்பு.

    பல ஆண்டுகளுக்கு முன்பு வேணாட்டை ஆண்ட பூதளவீர ஸ்ரீவீரஉதயமார்த்தாண்டவர்மா என்ற களகாட்டை தலைநகராக கொண்ட மன்னர் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த கோவில் பற்றி கேள்வியுற்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இங்கு வந்து வழிபட்டார். இதனால் அவர் பூரண குணம் அடைந்தார். இதனால் இந்த ஆலயத்தின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. இதையடுத்து மன்னர் ஆவணிமாத ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜைகளை நடத்தி காணிக்கைகளை செலுத்தினார் என கோவிலில் உள்ள கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி 1 மைல் தூரத்திற்கு பாம்பு கடித்து யாரும் இறந்ததாக சான்று கள் இல்லை என கூறப்படுகிறது.

    நாகராஜா கோவிலில் குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்து நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்டு மாதம் 20-ந்தேதியும், 2-வது ஞாயிற்றுக் கிழமை 27-ந்தேதி, 3-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3-ந்தேதியும், 4-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10-ந்தேதியும், 5-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17-ந்தேதியும் வருகிறது. 5 ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு சுவாமி வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற் பாடு பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

    கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்தர்கள் ஒரு வழியாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மறுபாதை வழியாக வெளியே வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அபிஷேக அர்ச்சனை டிக்கெட் வழங்கப்படுகிறது. டிக்கெட் வாங்கியவர்கள் தனி வரிசையில் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர் களுக்கு பிரசாதமாக சில்வர் பாத்திரத்தில் பால் பாயாசம் மற்றும் தேங்காய் பழம் வழங்கப்படுகிறது.

    தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலில் வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×