வீடு புகுந்து கொள்ளையடித்த பணத்தில் தினமும் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த வாலிபர்

காதலிகளுக்கு விதவிதமான நகைகளும், ஊட்டியில் நிலமும் வாங்கி கொடுத்து அசத்தினார்யாரையும் கூட்டு சேர்ப்பதில்லை, தனியாக சென்று நோட்டமிட்டு கொள்ளை
வீடு புகுந்து கொள்ளையடித்த பணத்தில் தினமும் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த வாலிபர்
Published on

நாகர்கோவில் :

தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள்.

இதில் கொள்ளை அல்லது நகை பறிப்பில் ஈடுபடும் பெரும்பாலான குற்றவாளிகள் போலீசாரின் கைகளில் சிக்கி விடுவார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தும் போது, திருடியதற்கான காரணம் குறித்து அவர்கள் கூறும்தகவல்கள் போலீசாரை சிலநேரம் வியப்பில் ஆழ்த்தும்.

பல நேரங்களில் அவர்கள் கூறும் காரணத்தை கேட்டு, இதற்காகவா? திருடினே என்று கேட்டு அவனை உண்டு, இல்லையென ஆக்கிவிடுவதுமுண்டு. அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று குமரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்தது.

நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் மகேஷ் கார்த்திக் என்பவர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.

வடசேரி போலீசார் இந்த நகை திருட்டு பற்றி விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும் ஒரு நபரின் உருவம் ஒன்றை கைப்பற்றினர்.

அந்த உருவ படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆனந்த் (வயது 24) என்ற வாலிபர் பிடிப்பட்டார். பார்க்க டிப்-டாப் உடையுடன் காட்சி அளித்த அந்த வாலிபர் மீது முதலில் போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை.

பின்னர் அவரிடம் விசாரித்த போது அவரது பேச்சும், நடை, உைட, பாவனையும் சந்தேகத்தை ஏற்படுத்த அவரை தனி இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் மகேஷ் கார்த்திக் வீட்டில் திருடியது, ஆனந்த் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், திருடியதற்கான காரணத்தை கேட்டனர். அதோடு எப்படி திருடினாய்? திருடிய நகையை என்ன செய்தாய்? கூட்டாளிகள் யார்? என்றும் போலீசார் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர்.

அனைத்து கேள்விகளுக்கும் எந்த சலனமும் இன்றி ஆனந்த் சிரித்து கொண்டே பதில் அளித்தார். அதன்விபரம்:-

குமரி மாவட்டத்தில் தான் திருட்டு தொழிலை தொடங்கினேன். இதற்காக யாருடனும் கூட்டு சேரவில்லை. முதலில் ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று அங்கு பூட்டிய வீடுகளை நோட்டமிடுவேன்.

அந்த வீடுகளில் யார் வசிக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வேன். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளையும் பார்த்து கொள்வேன். பின்னர் அந்த வீட்டுக்கு இரவு நேரத்தில் கையுறை மற்றும் காலில் ஷூ அணிந்து செல்வேன். அங்கு கிடைக்கும் பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்துவிட்டு கம்பி நீட்டிவிடுவேன்.

கொள்ளை அடித்த பணத்தை பெண்களுடன் உல்லாசமாக இருக்க செலவு செய்வேன். ஒரு பெண்ணிடம் மட்டும் இல்லை பல பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது.

குறிப்பாக பணத்தேவையில் இருக்கும் பெண்களிடம் மட்டுமே தொடர்பு கொள்வேன். முதலில் அவர்களுக்கு முதலில் தேவையான பணத்தை கொடுப்பேன். அதன்பின்பு என் ஆசையை தெரிவிப்பேன். பணம் வாங்கியதால் அவர்களும் நான் கேட்பதை தருவார்கள். அப்போது அவர்களுக்கு நகைகளையும் வாங்கி கொடுப்பேன். இதில் அவர்கள் என்னிடம் மயங்கி விடுவார்கள்.

இப்படி குமரி மாவட்டத்தில் மட்டும் 6 பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. இவர்களுக்கு திருடிய பணத்தில் விதவிதமான நகைகள் வாங்கி கொடுத்துள்ளேன்.

பெண்களை சந்திக்க செல்வதற்கு ஒருபோதும் கூட்டு சேர்க்க மாட்டேன். அவ்வாறு சேர்த்தால் மாட்டி கொள்வோம். இதனால் நான் இந்த இடங்களுக்கு தனியாகத்தான் செல்வேன்.

அவர்களிடம் நான் என்ன செய்கிறேன், எப்படி நகை வாங்கி வந்தேன் என்பது பற்றி கூறமாட்டேன், என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அவரது அனுபவங்கள் போலீசாருக்கு புதிதாக இருந்தாலும் அவர் திருடிய பணத்தில் ஊட்டியில் நிலம் வாங்கியிருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆனந்த் எங்கெங்கு திருடியுள்ளார்? மொத்தம் எத்தனை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு உள்ளது? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com