6 நகரங்களில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தார்

டிஜிட்டல் துறையில் தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.ஸ்டேண்ட் அலோன் என்பது முற்றிலும் ஒரு புதிய தளமாகும்.
6 நகரங்களில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தார்
Published on

சென்னை:

இணைய தொழில்நுட்பத்தில் அபார வளர்ச்சியை அடைந்து வரும் இந்தியாவில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் சென்னையில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியது.

சென்னையை தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கும் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடந்தது.

தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு மதுரை உள்ளிட்ட 6 நகரங்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவையை தொடங்கிவைத்தார்.

விழாவில் அவர் பேசும்போது, 'டிஜிட்டல் துறையில் தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை மூலம் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மேம்படும். கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பாடு அடைய ஜியோ நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது' என்றார்.

விழாவில் ஜியோ நிறுவனத்தின் தமிழக நிர்வாக தலைவர் ஹேமந்த்குருசாமி பேசியதாவது:-

இந்த ஆண்டு (2023) இறுதிக்குள் கிராமம், நகரம் என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளோம். மற்ற நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, 'ஸ்டேண்ட் அலோன்' நெட்வொர்க்குக்கு பதிலாக 'நான் ஸ்டேண்ட் அலோன்' நெட்வொர்க்கை பயன்படுத்தின.

ஸ்டேண்ட் அலோன் என்பது முற்றிலும் ஒரு புதிய தளமாகும். இதன் காரணமாக 5ஜி சேவை மிக வேகமாகவும், சிறந்ததாகவும் இருக்கும். இந்த நெட்வொர்க்கை தயாரிக்க 4ஜி இயங்குதளம் பயன்படுத்தப்படவில்லை. இது அதிவேக இணையத்தை வழங்குவதோடு போன் அழைப்புகளின் தரமும் சிறப்பாக இருக்கும். இதன்மூலம் ஜியோவின் 5ஜி சேவை மட்டுமே உண்மையான 5ஜி சேவையாக இருக்கும்.

தமிழகத்தில் 5ஜி சேவைக்காக ஜியோ நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com