பல்லடம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

2 பவுன் தங்க காயின், ரொக்கம் ரூ.70 ஆயிரம் ஆகியவையும் திருட்டுப் போனது.திருட்டு சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் நாட்டுக்கோழிகள் திருட்டுப் போய் உள்ளது.
பல்லடம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்றுள்ளது. வட்டமலை பாளையம் பகுதியில் அந்தப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 65) என்பவர் தனது தோட்டத்தில் 75 ஒரிஜினல் நாட்டுக்கோழிகளை ஆர்கானிக் முறையில் வளர்த்து வந்தார். இந்த கோழிகளை காணவில்லை. மேலும் அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி (50) என்பவரது 15 நாட்டுக்கோழிகளும், ரங்கசாமி (55) என்பவரின் 5 நாட்டுக்கோழிகளையும் காணவில்லை.

ஒரே நாள் இரவில் 3 பேரின் தோட்டத்தில் வளர்த்து வந்த 95 நாட்டுக்கோழிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதில் ரங்கசாமி என்பவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. மேலும் அதே நாளில் அந்தப் பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து முக்கால் பவுன் மோதிரம், ரொக்கம் ரூ.15 ஆயிரம் திருட்டு போனது. மேலும் இவரது வீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்த சுபாத்தாள் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க காயின், ரொக்கம் ரூ.70 ஆயிரம் ஆகியவையும் திருட்டுப் போனது.

இந்த திருட்டு சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் நாட்டுக்கோழிகள் திருட்டுப் போய் உள்ளது. மேலும் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தின கிழக்குப் பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ளஒரு வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை மற்றும் பணம் திருட்டு போய் உள்ளது. அதுபோல் கொடுவாய் பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் திருடப்பட்டு உள்ளது. மேலும் பொங்கலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த இரண்டு திருடர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுபோல் தொடர்ந்து கடந்த சில நாட்களில் மட்டும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அவினாசிபாளையம் போலீசார் இரவு ரோந்து பணிகளை தீவிரப் படுத்துவதுடன், வாகன சோதனையிலும் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com