search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்னும் 2 நாட்கள் வெயில் வறுத்தெடுக்கும்- அடுத்த வார இறுதியில் வெப்ப அனல் குறையலாம்
    X

    இன்னும் 2 நாட்கள் வெயில் வறுத்தெடுக்கும்- அடுத்த வார இறுதியில் வெப்ப அனல் குறையலாம்

    • திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று மாலையில் மழை மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
    • 4 அல்லது 5 நாட்களுக்கு பின்னர் படிப்படியாக வெயில் குறையலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது.

    அவ்வப்போது திடீரென பெய்த மழை சற்று ஆறுதல் அளித்த போதிலும் கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே பதிவாகி உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் 105 டிகிரியை தாண்டி வெயில் வறுத்தெடுத்தது.

    இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் சென்னையில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சென்னையில் வெயிலின் தாக்கம் இன்றும், நாளையும் அதிகமாகவே இருக்கும். அதே நேரத்தில் நேற்று பதிவானதை விட சற்று குறைவான அளவிலேயே வெயில் பதிவாக வாய்ப்புகள் உள்ளன.

    நேற்று 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. இன்றும் நாளையும் ஒரு டிகிரி அளவுக்கு வெயில் குறையலாம்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று மாலையில் மழை மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த மழை மேகங்களால் சென்னை மாநகரிலும் சில இடங்களில் மழை பெய்யலாம். ஒருவேளை அப்படி பெய்தால் சூடு குறைய வாய்ப்புள்ளது.

    அடுத்த வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. 4 அல்லது 5 நாட்களுக்கு பின்னர் படிப்படியாக வெயில் குறையலாம். அப்போதுதான் 100 டிகிரிக்கும் குறைவாக வெயில் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மேலும் 2 நாட்கள் வெயில் வாட்டி எடுக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் அந்த 2 நாட்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×