

ஆறுமுகநேரி:
சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகளின் ஒன்றுகூடல் விழா நடைபெற்றது.1972 முதல் 2022 வரை பயின்றவர்களில் பலர் இதில் பங்கேற்றனர்.
விழாவிற்கு பள்ளியின் அறங்காவலரும் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவருமான ஜி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மற்றொரு அறங்காவலரான மூத்த பொது மேலாளர் ராமச்சந்திரன், மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ், தலைமை ஆசிரியர்கள் சுப்புரத்தினா, ஸ்டீபன் பாலாசிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் அனுராதா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
புதுச்சேரி தொழிலாளர் துறை மற்றும் தீயணைப்புத் துறை அரசு செயலாளர் சுந்தரேசன், பட்டிமன்ற பேச்சாளர் குருஞானாம்பிகை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் பள்ளியின் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. இதனை ஜி. சீனிவாசன் வெளியிட சுந்தரேசன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும் கலந்துரையாடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் சங்க துணை தலைவர் தர்மபெருமாள், செயலாளர் சதானந்தம், இணைச் செயலாளர் இளங்கோபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளரும் பள்ளி நிர்வாகியுமான வி.மதன் நன்றி கூறினார்.