search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்
    X

    ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்

    • காளை மாட்டு சிலை அருகில் தூய்மை பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும். இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

    பணி நிரந்தரம், குறைந்த பட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்ற நிலையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராகவன் முன்னிலையில், மாநகராட்சி உதவி ஆணையர் சுதா, தொழிற்சங்க நிர்வாகிகள் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, எல்.பி.எப். மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, 5-வது நாளாக நேற்றும் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த நிலையில் 6-வது நாளாக தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக காளை மாட்டு சிலை அருகில் தூய்மை பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் சின்னசாமி, மற்றும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே 6-வது நாளாக தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதால் மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1,800 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். 500 நிரந்தர தூய்மை பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 257 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது தவிர மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தால் மாநகர் பகுதியில் ஆயிரம் டன் குப்பைகள் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி சென்று ள்ளதால் குப்பைகள் மலை போல் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தற்சமயம் மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களை வைத்து குப்பைகள் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×