search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்
    X

    குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்

    • சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, மேற்கு பள்ளபாளையம், கிழக்கு பள்ளபாளையம், ஒலப்பாளையம், ராசம்பாளையம், திப்பம்பாளையம், வசந்தம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இந்த பகுதி நொய்யல் ஆற்றின் ஒரத்துப்பாளையம் அணையொட்டிய பகுதிகளில் வருவதால் சாயகழிவு நீர் தேங்கிய காரணத்தால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு கொடுமுடி, முத்தூர், காங்கேயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை குடிநீர் கேட்டு புஞ்சை பாலதொழுவு கிராம மக்கள் சென்னிமலை -ஊத்துக்குளி மெயின் ரோட்டில் ஆலமரம் 4 ரோடு சந்திப்பில் அரசு டவுன் பஸ்சினை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீர்வு ஆக வில்லை. இதனால் காலையில் திருப்பூர் பனியன் நிறுவனத்திக்கு வேலைக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் செல்லும் வேன்கள் அதிகளவில் வந்ததால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உடனடியாக பெருந்துறை தாசில்தார் குமரேசன், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி தலைவர் தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனடியாக லாரி தண்ணீர் வழங்கவும், தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட 9 பேர் கொண்ட கமிட்டி அமைத்து விரைவில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் குமரேசன் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இந்த சாலை மறியலால் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×