

ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர்.
இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.25 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,389 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல்காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், என மொத்தம் அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.