மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.
மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில பதிவாளர் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி 4 . 7 . 2022 முதல் 12.8.2022 வரை தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 18-ந் தேதி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விநாயகமூர்த்தி, மாவட்ட நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும்.

கூட்டுறவு வங்கியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு ஊதியமாக 10,000, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 3:1 என்கிற விகிதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும்.

எஸ்.ஆர்.பி மூலம் 2015-16 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com