வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை, ராசி கற்கள் திருட்டு

சென்னிமலை அருகே வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை திருட்டு.இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை, ராசி கற்கள் திருட்டு
Published on

சென்னிமலை:

சென்னிமலை- ஊத்துக்குளி ரோடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (58). விவசாயி. இவரது மனைவி விஜய குமாரி. இந்த கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு உள்ளது. விஜயகுமாரியின் தம்பி கிருஷ்ணமூர்த்தி வீட்டை பராமரித்து வருகிறார்.

கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 25 ஆண்டு களாக புதுச்சேரியில் குடியிருந்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு சில முறை மட்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருவார்கள். அப்போது அவர்கள் தோட்டத்தின் வீட்டில் தங்குவது வழக்கம்.

இந்நிலையில் அந்த வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்னிமலையை சேர்ந்த சம்பந்த குருக்கள் அங்கு வந்தார். அப்போது சந்தானகிருஷ்ணனின் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வீட்டை பராமரித்து வரும் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் சொன்னார். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது வீட்டின் பீரோ, உள் லாக்கர் ஆகியவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

அப்போது வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் அரை பவுன் எடையுள்ள 3 மூக்குத்திகள் மற்றும் 10 ராசி கற்கள் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. திருட்டுப்போன பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து சென்னி மலை போலீசில் கிருஷ்ண மூர்த்தி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு திருட்டு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com