search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்
    X

    நீலமலைக்கோட்டை ஊராட்சி கரியகவுண்டன்பட்டியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து குழந்தைகளுக்கு அமைச்சர் இ.பெரியசாமி இனிப்பு வழங்கினார். அருகில் கலெக்டர் பூங்கொடி உள்பட அலுவலர்கள் உள்ளனர்.

    தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்

    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திட்டமிட்டபடி முதல்-அமைச்சரால் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது.
    • இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2 புதிய அங்கன்வாடி கட்டிடம், 2 ரேசன் கடைகள், 1 குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் 1 புதிய பள்ளி கட்டிடத்தினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் திறந்து வைத்தார்.

    இதில் அமைச்சர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.20 கோடியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கினார்கள். ரூ.20 கோடியை 5 மாதங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக அனைத்து கிராம மக்களுக்கும் அதிகமான வேலைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மேலும் அதிகமான வேலை நாட்கள் வழங்கப்படும். பொதுமக்களால் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திட்டமிட்டபடி முதல்-அமைச்சரால் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து தகுதியுள்ள நபர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். அரசு விதித்துள்ள விதிகளின்படி அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எண்ணிக்கை நிர்ணயம் செய்யாமல் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 10 ஆண்டுகளில் எந்தவித நிதியும் கூடுதலாக ஒதுக்கப்படவில்லை. ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் சாலை பணிகள் அமைக்கப்படும் என பேசினார்.

    இதில் வேலுச்சாமி எம்.பி., ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்புலட்சுமி சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாதேவி சாமிநாதன், செல்வராணி, ஒன்றியக்குழு உறுப்பினர் விவேகானந்தன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×