தாமிரபரணி, கடனா நதிகளில் வெள்ளப்பெருக்கை கண்காணிக்கும் நவீன முன்எச்சரிக்கை கருவிகள்

10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து. முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
தாமிரபரணி, கடனா நதிகளில் வெள்ளப்பெருக்கை கண்காணிக்கும் நவீன முன்எச்சரிக்கை  கருவிகள்
Published on

நெல்லை:

தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் உள்ளிட்ட மாற்றங்களை முன்கூட்டியே உடனுக்குடன் கண்டறியும் வகையில் 450 இடங்களில் இ.டபிள்யூ.எஸ். எனும் ஆரம்ப எச்சரிக்கை நவீன கருவிகளை அமைக்கும் பணிகளை பேரிடர் மேலாண்மை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

நெல்லை மாநகராட்சி மூலமாக கேபாசிட்டிஸ் என்னும் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பில் தாமிரபரணி, ராமநதி மற்றும் கடனா நதிகளில் வெள்ளப்பெருக்கினை முன்கூட்டியே கண்காணித்து எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வகையில் 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.

தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்படும் இந்த கருவிகள் விரைவில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருவிகள் தாமிரபரணி, கடனா, ராமநதி வழித்தடங்களான கோபாலசமுத்திரம், கோவில்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆலடியூர், பொட்டல்புதூர், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், முறப்பநாடு, சேரன்மகாதேவி, கொக்கிரகுளம் ஆகிய இடங்களில் அமைகிறது.

இதன் மூலம் ஆறுகளில் எவ்வளவு வெள்ளம் வரும்? எப்போது வரும்? என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் எஸ்.எம்.எஸ். மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

இந்த தகவல்கள் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, முக்கிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதில் சேரன்மகாதேவி மற்றும் கொக்கிரகுளத்தை தவிர மற்ற இடங்களில் கருவி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இந்த கருவியில் காமிரா, சென்சார் வசதி, சோலார் பேனல் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கருவிகள் அமைப்பது குறித்து கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com