கொடைக்கானலுக்கு வருபவர்களுக்கு 3 நிறங்களில் இ-பாஸ்

சுற்றுலாப்பயணிகள் வடுகையால் கடும் போக்குவரத்து நெரிசல்.அரசு பஸ்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியம் இல்லை.
கொடைக்கானலுக்கு வருபவர்களுக்கு 3 நிறங்களில் இ-பாஸ்
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அதன்படி கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் நாளை (7-ந் தேதி) முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறையையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு வருகை தரும் அரசு பஸ்களில் விபரங்கள் மற்றும் அதில் பயணிப்பவர்களின் விபரங்கள் நேரடியாக போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குனரிடமிருந்து பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே அரசு பஸ்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

கொடைக்கானலுக்கு வருகை தர உள்ள சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் விபரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. 3 வகையான அடையாள கோடுகளுடன் இ-பாஸ் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சை நிற அடையாள கோடும், வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீல நிற அடையாள கோடு, சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாள கோட்டுடனும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானல், வெள்ளி நீர்வீழ்ச்சி, சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு நாளை முதல் ஜூன் 30-ந் தேதி வரை ஒரு முறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூர் இ-பாஸ் பெற்றுக் கொண்டால் போதுமானது.

சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு தங்கள் வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, நடப்பில் உள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையத்தில் பதிவு செய்து இ-பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் செல்போன் செயலி மூலம் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விபரங்களை தெரிந்து கொள்வார்கள்.

இ-பாஸ் தொடர்பான துரித சேவைகளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com