என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
- காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 19). இவரும் பாடியூர் கிராமத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் முத்துலட்சுமி செல்போனில் அடிக்கடி பேசுவதை அவரது பெற்றோர் நோட்டமிட்ட போது அவர் காதலில் விழுந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிக்க முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவீட்டில் இருந்தும் பெற்றோர் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் பெற்றோர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என நினைத்து தாங்களாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வீட்டிற்கு சென்றால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என அவர்களது பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு மணமகன் வீட்டாருடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.
மகளிடம் அவரது தாய் மன்றாடி தன்னுடன் வருமாறு கேட்டும், வராமல் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்ததால் கதறி அழுது புலம்பியது அங்கிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க வைத்தது.






