என் மலர்
உள்ளூர் செய்திகள்

திம்பம் மலைப்பாதை தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தை
- மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
- வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சம் அடைந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்து உள்ளது.
திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 27 -வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை படுத்து இருந்தது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சம் அடைந்தனர். வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,
திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் முடிந்த அளவு இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது என்றனர்.






