

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி யில் புதிய சாலைகள், வாகனம் நிறுத்தும் இடங்கள், நடைபாதைகள், வடிகால்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகளுடன் மாநகர பகுதி கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு நேரடி கள ஆய்வுகளும் நடத்தி மேயர் ஜெகன் பெரியசாமி வளர்ச்சி திட்ட பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். சாலைகளில் மணல் சேர்வதை தடுக்க பிரத்யேக வாக னங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போக்கு வரத்தை முறைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநகர சாலைகளில் மணல் குப்பைகள் கொட்டப்படுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அண்ணாநகர் பகுதி சாலை நடைபாதைகளில் பல இடங்களில் மணல்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாகன நிறுத்துமிடங்களை பின்பற்றாமல் சாலைகளில் வாகனம் நிறுத்தும் போக்கும் இருந்து வருகிறது. இந்நிலையில் சாலைகளில் குப்பைகள், மணல்களை கொட்டும் சம்பவம் தொடர்ந்து வருகிறது என சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாநகராட்சியில் மாசற்ற நிலையை உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.