முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆலோசனை

மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.536 கோடி ஊழல் புகார்.11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆலோசனை
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.536 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் வெங்கடேஷ் என்பவர் கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்திருந்த புகாரில் மழைநீர் வடிகால் பணிகள் அமைத்ததில் ரூ.290 கோடி மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிக்காக ரூ.246.39 கோடி மதிப்பிலான பணிகளை ஒப்பந்தம் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாகவே எஸ்.பி. வேலுமணி மற்றும் மாநகராட்சி என்ஜினீயர்கள் உள்பட 10 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி உள்பட 11 பேரின் வீடுகளில் விரைவில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முறைகேடு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் வீடுகளிலும் விரைவில் சோதனை நடத்துவது பற்றி உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றனர் .

இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உடனேயே சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் எஸ்.பி.வேலு மணி மீது வழக்கு போடப்பட்டுள்ள நிலையிலும் சோதனை எதுவும் நடைபெறவில்லை.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, எஸ்.பி. வேலுமணி உள்பட 11 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்துவது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். அதுபற்றி விரைவில் முடிவெடுத்து சோதனை நடத்துவோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com