

நெல்லை:
விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் அம்மா நகரைச் சேர்ந்தவர்கள் இளையபெருமாள் மகன்கள் இசக்கிமுத்து (வயது 35), மாரியப்பன் (33) செல்லப்பா (31). இவர்கள் 3 பேரையும் குற்ற வழக்கில் விசாரணைக்காக அழைத்து சென்ற அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் போலீசார், இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரின் வாயிலும் கற்களை வைத்து அடித்தும், அவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் மற்றும் நிர்வாகிகள், சிவந்திபுரத்தில் உள்ள இசக்கிமுத்துவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். சங்க இயக்குனர்கள் எஸ்.கே.டி.காமராஜ், வைத்திலிங்கம், கருணாகரன், இந்து நாடார் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் காசிராஜ், சிவந்திபுரம் பொது வியாபாரிகள் சங்க தலைவர் அந்தோணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.