search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோக்கா புயல் நாளை கரையை கடக்கிறது- சென்னையில் வெயில் குறைந்தது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மோக்கா புயல் நாளை கரையை கடக்கிறது- சென்னையில் வெயில் குறைந்தது

    • வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் அதி தீவிரமடைந்துள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் அதி தீவிரமடைந்துள்ளது. அது, மே 14-ந் தேதி நண்பகல் மியான்மர் கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. அதாவது போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே நிலை கொண்டுள்ளது.

    இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி 150 கி.மீ. முதல் 175 கி.மீ. வேகத்தில் கடக்கக்கூடும்.

    இதன் காரணமாக ஏற்படும் வெப்ப சலனத்தால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் மே 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×