search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானது
    X

    வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானது

    • வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • மோக்கா புயல் கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் உருவானது. நேற்று முன்தினம் இரவு அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

    நீண்ட நேரமாக அந்த காற்றழுத்தம் அதே பகுதியிலேயே நிலைக்கொண்டு இருந்தது. பிறகு அது மெல்ல வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கியது.

    அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் முதல் வலுவடைய தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) காலை அது புயலாக மாறியது. அந்த புயலுக்கு மோக்கா புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புயலாக மாறிய பிறகு அது சற்று வேகமாக நகர தொடங்கி உள்ளது. தொடர்ந்து அந்த புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். நாளை அதன் நகரும் திசையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள அந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) அது அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.

    இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அது வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும்.

    தற்போது அந்த புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி போர்ட் பிளேயர் பகுதியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தென்மேற்கு திசையில் இருந்தது. அதன் நகரும் வேகம் 15 கிலோ மீட்டராக உள்ளது. இன்று மாலை அதன் நகரும். வேகம் மேலும் அதிகரிக்கும்.

    13-ந்தேதி (சனிக்கிழமை) அது தொடர்ந்து வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி வேகமாக நகரும் அதற்கு அடுத்த நாள் (14-ந்தேதி) காலை அந்த புயல் வங்க தேசத்தில் உள்ள காக்ஸ் பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடக்கும் முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா நிபுணர்கள் கணித்துள்ளனர் என்றாலும் மோக்கா புயல் கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    வங்கக்கடலில் புயல் உருவானதை தொடர்ந்து மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்த்து உள்ளனர். தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    புயல் காரணமாக அந்தமான், நிக்கோபார் தீவு பகுதியில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில 70 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×