

கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள மாதம்பட்டி காளிகை தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணபாண்டி (வயது 33). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி மணி பிரியா. இவர்களுக்கு ஒரு மகன்,ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.சம்பவத்தன்று கிருஷ்ணபாண்டி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். மேலும் மது பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணபாண்டி தனது மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் ேதாட்டத்தில் உள்ள கிணற்றின் சுவரில் அமர்ந்து இருந்தார். அப்போது மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் பேரூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து கிருஷ்ண பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.