சர்க்கரை நோயால் குழந்தைகள் பாதிப்பு - மருந்துகள் வாங்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்

சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் சர்க்கரை நோய் உள்ளது.டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சர்க்கரை நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளை படத்தில் காணலாம்
சர்க்கரை நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளை படத்தில் காணலாம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி பெயர் வித்ய ஜோதி . இவர்களுக்கு மோகித் என்ற 7 வயது மகனும் , விதர்சனா என்ற 4 வயது மகளும் உள்ளார்கள். மோகித் பிறந்த 4 வருடங்களில் இரவு நேரங்களில் அதிக அளவில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தவுடன் பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்படவே மோகித்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் டைப் 1 என சொல்லக்கூடிய சர்க்கரை நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , வாழ்நாள் முழுவதும் தினமும் 4 முறை இன்சுலின் ஊசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் இதே சர்க்கரை நோய் உள்ளது. இவர்கள் இருவருக்கும் தினமும் 4 முறை ஊசி செலுத்த வேண்டும். இவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை நோய் வகைக்கு அரசு மருத்துவமனையில் முறையான மருந்துகள் கிடைக்காததால் தனியார் மருத்துவமனையில் இருந்து மருந்துகளை வாங்கி வருகின்றனர்.

ஒரு குழந்தைக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் என்ற வீதம் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து மாதம் ஊசிக்கு மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்கின்றனர் பெற்றோர்கள்.

பனியன் கம்பெனியில் கிடைக்கும் வருவாயில் பாதிக்கும் மேல் குழந்தைகளின் மருந்து செலவிற்கே சென்று விடுகிறது. மீதமுள்ள பணத்தை கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்க முடியாத சூழலில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தோம். ஆனால் டைப் 1 இன்சுலின் மருந்து அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. டைப்-2 இன்சுலின் மருந்து மட்டுமே தரப்படுகிறது. எனவே குழந்தை பாதிக்கப்பட்டிருக்கும் சர்க்கரை நோய் வகைக்கு ஏற்ற மருந்துகளை எந்த தடையும் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளிலும் டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com