

சென்னை:
இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனரும் இ.சி.ஐ. திருச்சபைகளின் தந்தையுமான பேராயர் எஸ்றா சற்குணம் வயது மூப்பின் காரணமாக கடந்த 22-ந்தேதி காலமானார்.
அவரது மூத்த மகள் அமெரிக்காவில் இருந்து வரவேண்டி இருந்ததால் அஞ்சலி செலுத்துதல், அடக்க ஆராதனை தள்ளி வைக்கப்பட்டது.
பேராயர் எஸ்றா சற்குணத்தின் உறவினர்கள், மத போதகர்கள் வெளிநாடுகளில் இருந்து வர வேண்டும் என்பதால் அவரது அஞ்சலி செலுத்தும நிகழ்வு மற்றும் அடக்க ஆராதனை 3 நாட்களுக்கு பிறகு இன்று நடந்தது.
சென்னை வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் இன்று காலை 6 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இ.சி.ஐ. திருச்சபைகளின் பேராயர்கள், ஆயர்கள், குடும்பத்தினர் மற்றும் பாடல் குழுவினர் ஜெபத்துடன் பாடல் இசைக்க மக்கள் வரிசையில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மேயர் பிரியா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜி.முத்துசெல்வன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.