

சின்னாளப்பட்டி:
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் கல்வெட்டியல், செய்தி சேகரித்தலும் செய்தி வாசித்தலும், நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
பல்கலைக்கழகப் பதிவாளர் சிவக்குமார் தலைமையேற்றார். அவர் பேசுகையில், ஊடகத் துறையில் வேலை வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. மாணவர்கள் ஊடகத்திற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். திறமைகளே உங்களை உயர்த்தும்.
அவற்றை வளர்த்துக் கொண்டால் மட்டுமே போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வெற்றிபெற முடியும். எனவே சான்றிதழ் படிப்புகளை நல்ல முறையில் கற்று உங்களின் எதிர்கால வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை உயராய்வு மையத்தின் இயக்குநர் ஸ்டீபன், தமிழ்த்துறைத் தலைவர் முத்தையா, பேராசிரியர் ஆனந்தகுமார், ராசரத்தினம், சிதம்பரம், சங்கரநாராயணன், கேசவ ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.