விசாரணைக்கு சென்ற போலீசாரை வழிமறித்து கொலை மிரட்டல்- பெண்கள் உள்பட10 பேர் மீது வழக்கு

வசந்த் உள்பட 9 பேரும் சேர்ந்து பெருமாள்சாமியை கற்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.6 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
விசாரணைக்கு சென்ற போலீசாரை வழிமறித்து கொலை மிரட்டல்- பெண்கள் உள்பட10 பேர் மீது வழக்கு
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகன் பெருமாள்சாமி (வயது25).

இவர் நேற்று தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த சிவா, நவீன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குடில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குடில் தெருவை சேர்ந்த வசந்த் (25), கிஷோர் (24), அரவிந்த் (23), மதன், தீபக், இளையராஜா, சுர்ஜித், ஆனந்த் உள்பட 9 பேர் பெருமாள்சாமியை வழிமறித்து எங்கள் ஊர் வழியாக வேகமாக செல்வதா? எனக் கேட்டுள்ளனர்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, வசந்த் உள்பட 9 பேரும் சேர்ந்து பெருமாள்சாமியை கற்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விசாரணை நடத்துவதற்காக குடில் தெருவிற்கு ஜீப்பில் சென்றனர். இதைப்பார்த்த அர்ஜுணன் மற்றும் குடில்தெருவை சேர்ந்த பெண்கள் போலீஸ் ஜீப்பை வழி மறித்தனர். அத்துடன் ஊருக்குள் செல்லக் கூடாது என்று ஜீப் முன்பு அமர்ந்து வழிமறித்தனர்.

மேலும் அர்ஜூணன், போலீசாரை பார்த்து ஊரை விட்டு வெளியே போங்கள், இல்லையெனில் ஒருவரும் உயிருடன் செல்ல முடியாது என்று கல்லை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வேறு வழியின்றி திரும்பி சென்றனர்.

இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி அளித்த புகாரின் பேரில், அர்ஜூணன் உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

விசாரணைக்கு சென்ற போலீசாரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com