

கடலூர்:
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை எதிர்த்து அண்ணாகிராம ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு கிராமங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்து வதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தினை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் பணிகளை பேக்கேஜ் டெண்டர் மூலம் மாவட்ட அளவில் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் பெருமளவு நிதி ஊராட்சி மன்றங்களுக்கு சேர வேண்டிய தொகையாகும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் போது அரசே அதிகாரிகள் மூலம் பேக்கேஜ் டெண்டர் விடுவதால் ஊரட்சி மன்றங்களின் உரிமை பறிபோவதாக ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த திட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே உள்ளனர்.எனவே அரசு வெளியிட்டுள்ள அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அரசாணையை ரத்து செய்ய கோரியும்,ஊராட்சி மன்றங்கள் மூலமாகவே டெண்டர் விட உத்தரவிட கோரியும் கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்குவந்தது.வழக்கினை விசாரித்த நீதிபதி சரவணன், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் கடலூர் கலெக்டர்பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை வருகிற 21-ந் தேதிக்கு அன்று தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளார்.