

தேனி:
முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன்முன்னிலையில் கம்பம் முகையதீன் ஆண்டவர்புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி அரசு மாதிரிப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர். கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும், பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் தமிழ்நாடு முதல் -அமைச்சருக்கு கிடைக்கப்பெற்றதன் காரணமாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி தேனி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 310 பள்ளிகளில் பயிலும் 16,173 மாணவ, மாணவியர்களும், ஊரக பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 52 பள்ளிகளில் பயிலும் 2467 மாணவ, மாணவியர்களும், நகராட்சி பகுதிகளில் 40 பள்ளிகளில் பயிலும் 2106 மாணவ, மாணவியர்களும், நகர் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 24 பள்ளிகளில் பயிலும் 1966 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 426 பள்ளிகளில் பயிலும் 22,712 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.