திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.வேத மந்திரங்கள் ஓத, கொடிமர பூஜைகள் நடந்தது.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ  கொடியேற்று விழா இன்று காலை நடந்தது.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்று விழா இன்று காலை நடந்தது.
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த திருவதி கையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து உற்சவர்களான சாமி-அம்பாள், தனி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோவிலில் இருந்து விசேஷ மலர் அலங்காரத்தில் பஞ்ச மூர்த்தி சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கொடிமர பூஜைகள் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடந்தது.

இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள், ஹரகர மகா தேவா, ஓம் நமச்சிவாய, சிவாயநம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர். கொடியேற்றத்தில் சுப்பராய செட்டியார் பெண்கள் பள்ளி செயலாளர் மாதவன், சபாபதி, வானவில் ராஜா, கணேசன் மற்றும் கவுன்சிலர்கள், கோவில் நிர்வாகத்தினர், உற்சவ தாரர்கள், உபயதாரர்கள், கட்டளைதார்கள், கிராம முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள், இந்துசமய ஆன்மீக பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் ஜூன் 1-ந்தேதி வியாழகிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அன்று இரவு 7 மணிக்கு திரிபுரசம்ஹாரம் எனும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவதிகை பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் எழுந்தருள உள்ளார். பின்னர் தேரில் வீற்றிருந்த திரிபுரசம்ஹாரமூர்த்தி, 3 அரக்கர்களையும் அவர்க ளது 3 கோட்டைகளையும் எரித்து சம்ஹாரம் நிகழ்த்தும் ஐதீக பெருவிழா நடக்கவுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com