

வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சியில் முதல் கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தர்மலிங்கம், செயல் அலுவலர் நந்தகுமார் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்களின் குறைகேட்பு நடைபெற்றது.
இதில் கவுன்சிலர்கள் பேசுகையில் வத்தலக்குண்டுவில் அரசு சார்பில் மின் மயானம் அமைக்க வேண்டும். பேரூராட்சி வார்டுகள் பிரித்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். ஆழ்துளை குடிநீர் கிணறுகளை சீரமைக்க வேண்டும்.
குப்பைகளை அகற்ற வேண்டும். காளியம்மன் கோவில் பகுதியில் கழிப்பறை கட்ட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பெயரை அவர் பிறந்த தெருவுக்கு சூட்ட வேண்டும்.
மன்ற அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் வைத்திருப்பதைப் போல முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை வைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பின்னர் தலைவர் பேசுகையில், மின் மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். வத்தலக்குண்டு குப்பைக்கிடங்கு நிறைந்து விட்டதால் தாசில்தாரிடம் வேறு இடம் கேட்டுள்ளோம். விரைவில் இடம் கிடைத்ததும் வத்தலக்குண்டு பேரூராட்சி தூய்மை நகராக மாறும் என்றார்.
கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சின்னத்துரை, மருதன், சிவக்குமார், மகாமுனி, தமிழரசி முத்துமாரியம்மாள், சுமதி, அழகுராணி, ரமிஜாபேகம், ராமுத்தாய், ஷியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இள நிலை உதவியாளர் முரளிமோகன் நன்றி கூறினார்.