

பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் ஊராட்சி கடசிக்காடு. இங்கு 47 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 25 அரசு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து தொகுப்பு வீடுகளும் சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்கு தண்ணீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரை தகரம், தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது.
மேலும் பலத்த காற்று வீசும் போது மேற்கூரையில் போடப்பட்டுள்ள தகரம் மற்றும் தார்ப்பாய் கிழிந்து விடுவதால், அதன் மேல் கருங்கற்களை அடுக்கி வைத்துள்ளனர். சில வீடுகளுக்கு மேற்கூரை போடாமல் உள்ளது. இதனை கிராம மக்கள்தங்கள் சொந்த செலவில் சரி செய்து வருகின்றனர். மேலும் குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி, கழிப்பறை வசதி போன்ற பல அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். இங்கு கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இங்கிருந்து வரும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். குடிநீருக்காக அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இக் கிராமத்துக்கு தற்போது புதிய போர்வெல் போட்டு, மேல்நிலை தொட்டி கட்டி குடிதண்ணீர் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.எனவே இந்தப் பணியை விரைவில் முடித்து குடிதண்ணீர் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாச்சலூர் ஊராட்சி மன்ற செயலர் ரகு தெரிவித்தார்.