search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பள்ளி- கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் விற்கும் கடைகளுக்கு தடை
    X

    கோவையில் பள்ளி- கல்லூரிகள் அருகே பீடி, சிகரெட் விற்கும் கடைகளுக்கு தடை

    • கல்வீரம்பாளையத்தில் 9 கடைகள் மூடப்பட்டன.
    • மளிகை கடைகளில் ஆய்வு செய்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை,

    கோவையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டர் தூரத்துக்குள் சிகரெட், பீடி, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்கும் பெட்டிக்கடைகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டிருக்கிறார்.

    கோவையில் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்திருப்பது சமீபத்தில் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட அளவில் ஒவ்வொரு பள்ளிக்கும் அருகில் 100 மீட்டர் தூரத்துக்குள் பெட்டிக்கடைகள் இருக்கிறதா என கணக்கெடுக்கப்பட்டது.

    துடியலூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, ஆலாந்துறை, வடவள்ளி, கிணத்துக்கடவு, காருண்யா நகர், க.க.சாவடி, கருமத்தம் பட்டி, செட்டிபாளையம், கோவில்பாளையம், சுல்தான்பேட்டை, சூலூர், பொள்ளாச்சி, கோமங்கலம் என அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள பெட்டிக்கடைகள் பட்டியலிடப்பட்டன. மொத்தம், 256 இடங்களில் பெட்டிக்கடைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இவற்றை அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் நேரில் ஆய்வு செய்து போதை பொருட்கள் விற்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விற்பது உறுதியானால் உடனடியாக பெட்டிக்கடைகளை அகற்ற வேண்டும் அல்லது மூடி சீல் வைக்க வேண்டுமென கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கல்வீரம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையிலான குழு நேற்று கள ஆய்வு செய்தது. கல்வீரம்பாளையத்தில் 9 கடைகள் மூடப்பட்டன. இதில் இரு பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டன. மளிகை கடைகளில் ஆய்வு செய்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் குழுக்கள் அமைத்து பெட்டிக்கடைகளில் ஆய்வு நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×